இயற்கை எழில் கொஞ்சும் அழகில் பார்சன்ஸ்வேலி அணை; குவியும் சுற்றுலா பயணிகள்

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு பகுதிக்கு, நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை, அதிகரித்து வருகிறது.

Update: 2023-08-02 03:30 GMT

Nilgiri News, Nilgiri News Today- ரம்யமான தோற்றத்தில், அழகிய காட்சி தரும் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 2196 மீட்டர் உயரத்தில் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. இது உலகச் சிறப்புமிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது.

அங்குள்ள அடர்ந்த இயற்கைக் காடுகள், பலவிதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கண்களுடன் மனதையும் மகிழ வைப்பவை. தூய்மையான காற்று, பனிபடர்ந்த மேகக் கூட்டத்துடன் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாக உள்ளது.

ஆங்கிலேய பொறியாளர் பார்சன் ஹட்சன் என்பவர், கடந்த 1862-ம் ஆண்டு இந்த பகுதியில் அழகான இடத்தை தேர்வு செய்து பாதை வகுத்து வழி ஏற்படுத்தித் தந்தார். எனவே, அந்த பகுதி இவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. குளிர் காலத்தில் மிகுந்த குளிர், மழைக்காலத்தில் மிகுந்த மழை, கோடைக்காலத்தில் குறைந்த வெப்பம் என்று அற்புத சூழலுடன் விளங்குகிறது.

மேலும், ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 3வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகி ன்றன. புனல் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். இங்கு தற்போது 33.59 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன் வேலி க்கான நீர்பிடிப்புப்பகுதி, 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதேபோல பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்ட வனமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு முழுமையான இன்பம் தரும் சுற்றுலாத்தலம் ஆகும்.

மரங்களின் தடையற்ற வளர்ச்சியும், படர்தாமரைகளும், ஊர்ந்து செல்லும் பறவைகளின் சப்தமும், ஒருசில நேரங்களில் புலியின் உறுமல்களும் சுற்றுலா பயணிகளின் கற்பனையை கவர்ந்திழுக்கும். பார்சன்ஸ்வேலி பள்ளத்தாக்கு பகுதிகளில் காட்டெருமைகளை அதிகம் பார்க்க முடியும். காட்டுப்பாதை செல்லும் வழியில் இருபக்கமும் செறிந்து நிற்கும் அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்கள் மற்றும் சிறு, சிறு நீரோடைகளை கடந்து செல்வது மனதிற்கு உற்சாகம் தரும் அனுபவமாக உள்ளது.

ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில், பார்சன்ஸ்வேலி அமைந்து உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்க பார்க்க பரவசம் தரும் பார்சன்ஸ்வேலி, ஊட்டியின் தாகம் தீர்க்கும் அணையாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆட்சியின் கீழ் உள்ள அற்புதமான இடம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மனநிறைவுடன் திரும்பி வருகின்றனர்.

Tags:    

Similar News