கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்

கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வரவேண்டாமென அறிவுறுத்தல்

Update: 2021-06-02 07:28 GMT

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று குறைந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் என நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். 

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி  நீலகிரி மாவட்டத்தில்  தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் என்ற பெயரில் தேயிலை தோட்டங்களை உருவாக்கினார். 

இந்த தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் தற்போது சுமார் 700 பேர்தொழிலார்களாக வேலை  செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக தோட்டத் தொழிலாளர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதால், தொற்றில் இருந்து தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்து, இன்று முதல் தேயிலைத்தோட்டங்கள் மூடப்பட்டது. தொற்று குறைந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News