கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை கரோலில் அடைக்கப்பட்டது

Update: 2021-06-17 12:07 GMT

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பின்புறம் வாலை ஒட்டிய பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை நேற்று வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தாமலே பிடித்தனர். ஈப்பங்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட அந்த சுமார் 27 வயது உள்ள அந்த ஆண் யானை நேற்று முழுவதும் அப்பகுதியில் நான்கு கால்களிலும் கயிற்றால் கட்டப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தற்காலிக சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அந்த யானையை முதுமலையில் அமைக்கப்பட்டுள்ள கூண்டிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள் உதவியுடன் மழை காரணமாக பெரும் சிரமத்திற்கு மத்தியில் வனத்துறையினர் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அபயாரன்யம் என்ற பகுதியில் அமைக்கப்பட்ட மரக் கூண்டில் யானை மாலை மூன்று முப்பது மணி அளவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. உதவி முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் அன்வர்தீன் மேற்பார்வையில் யானையைப் பிடித்து கூண்டில் அடைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து இந்த யானையின் பின் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News