நீலகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் புகைப்படக் கண்காட்சி

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் டி.வெங்கடேஷ் திறந்து வைத்தார்.

Update: 2022-05-20 11:45 GMT

சுதந்திரப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய பிரபலமடையாத வீரர்களை வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டும் கண்காட்சிகளும் நிகழ்ச்சிகளும், நமது சுதந்திரத்திற்குப் பின்னணியில் இருக்கும் வரலாறு மற்றும் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கான வரப்பிரசாதமாக விளங்கும் என்று வன பாதுகாவலரும், நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான டி. வெங்கடேஷ் கூறியுள்ளார்.


இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டையும், விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களையும் போற்றும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சென்னை பிரிவு நீலகிரியில் ஏற்பாடு செய்துள்ள புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து வெங்கடேஷ் பேசினார். அப்போது இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில் அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள இது போன்ற கண்காட்சிகள் உதவிகரமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பழங்குடி மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாகவும், மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகமும் இந்த சமூக மக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் நீலகிரி பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் உதயகுமார் தெரிவித்தார். சுதந்திரப்போராட்டத்தில் பழங்குடி மக்களும் தீவிரமாக ஈடுபட்டனர் என்றும், பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் எஸ். வெங்கடேஸ்வர், இது போன்ற கண்காட்சிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அதிகம் அறிந்திராத மற்றும் உள்ளூர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறினார். இதே கருப்பொருளில் நாடு முழுவதும் விரைவில் 750 கண்காட்சிகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்களின் முயற்சியால், சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாட்டில் சீர்திருத்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை பேசுகையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இது போன்ற கண்காட்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுவதாகக் கூறினார். பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன்கள் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொண்டு, அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் ஜே. காமராஜ் வரவேற்புரையும், கோயம்புத்தூர் கள மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குநர் கரீனா பி. தெங்கமம் நன்றியுரையும் வழங்கினார்.

துவக்க விழாவின் போது மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டதுடன், பழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும், மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் சிறப்பு கையேடும் வெளியிடப்பட்டன. மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநர் ஜெயராமன், நீலகிரி ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

தோடர்கள், கோட்டர்கள் ஆகிய நீலகிரி பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனங்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. யோகா மற்றும் பழங்குடி மக்களின் நல்வாழ்வு குறித்த சிறப்பு அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியை மே 24, 2022 வரை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

Tags:    

Similar News