யானைக்கு தீ வைத்த 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

Update: 2021-03-10 06:15 GMT

உதகை அருகே காட்டுயானைக்கு தீ வைத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இந்த யானை தனியார் தங்கும் விடுதிக்குள் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் ரேமாண்ட் டீன் மற்றும் கூலி தொழிலாளி பிரசாந்த் ஆகியோர் யானை மீது தீப்பந்தத்தை பற்ற வைத்து வீசினர். இதனால் காது பகுதியில் தீ பற்றியதால் யானை துடிதுடித்து தீக்காயத்துடன் வனப்பகுதிக்குள் ஓடியது . மேலும் யானையின் காதில் இருந்து ரத்தம் தொடர்ந்து வெளியேறியது.

பின்னர் ஜனவரி 19-ந்தேதி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. யானைக்கு தீ வைத்த சம்பவம் குறித்த வீடியோவும் வெளியானது. அதனையடுத்து விடுதி உரிமையாளர்கள் உள்பட இருவரும் கைது செய்யப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரிக்கி ரெயான் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு உயிருடன் தீ வைத்த விடுதி உரிமையாளர்கள் ரேமாண்ட் டீன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News