ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம்

வையப்பமலை அருகே, தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தக்கோரி, பொதுமக்கள் நடு ரோட்டில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-24 02:45 GMT

வையப்பமலை அருகே, நடு ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு தாலுக்கா வையப்பமலை அருகே குப்பிச்சிபாளையம் பஞ்சாயத்தில் உள்ளது செக்காரப்பட்டி கிராமம். இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், தெருக்களில் மழைநீர், குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் சுகதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.  இது குறித்து ஏற்கனவே பஞ்சாயத்திலும், பல்வேறு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும்,  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், செக்காரப்பட்டி பொதுமக்களை ஒன்றிணைத்து, தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பின்னர், சேறும் சகதியுமான தெருவில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  தேங்கி நின்ற தண்ணீரில் சோப்பு போட்டு குளித்தனர்.

இந்த நூதன போராட்டத்திற்கு, சிபிஐ (எம்) கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், பூபதிமுருகன் ரமேஷ், பிஏசிபி இயக்குனர் மாரிமுத்து, எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். தகவல் கிடைத்ததும் அங்கு வந்த பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், உடனடியாக பணிகளை தொடங்கி மழைநீரை அகற்றி புதிய சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததால்,  பொதுமக்கள் போராட்டத்தை முடித்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News