ஓ.ராஜாபாளையம் பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஓ.ராஜபாளையம் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஓ.ராஜபாளையம் பஞ்சாயத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓ.ராஜபாளையம் பஞ்சாயத்து, குட்டிமேய்க்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலக கட்டிடத்திற்கு மேற்கூரை அமைத்தல், சாய்வு தளம் அமைத்தல், பொருட்கள் வைக்கும் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சாயத்து பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஆகியவற்றை அரைத்து தூளாக்கும் இயந்திரம் நிறுவும் பணிகளை பார்வையிட்ட அவர், அங்கன்வாடி குழந்தைகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.
ஒக்கிலிபட்டியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், போர்வெல் கிணறு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்போது டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், பிடிஓக்கள் டேவிட் அமல்ராஜ், சாந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.