அன்புமணி ராமதாஸ் எம்.பி க்கு கொ.ம.தே.க. ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வேண்டுகோள்

அன்புமணி ராமதாஸ் எம்.பி க்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-05-18 10:30 GMT

ஈஸ்வரன்.

கொங்கு மண்டல விவசாயிகளைக் குறை கூறுவதை அன்புமணி ராமதாஸ் எம்.பி தவிர்க்க வேண்டும் என்று கொ.ம.தே.க. ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கொ.ம.தே.க .பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 10ம் தேதி ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ், கொங்கு மண்டல நீரேற்றுப் பாசன விவசாய சங்கத்தை சார்ந்தவர்களை குற்றம்சாட்டி அறிக்கை விட்டுள்ளார். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட விவசாய நிலங்களின் வறட்சி தெரியாமல் அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ள கருத்து கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் ஓடுகின்ற தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும்தான் என்ற தொனியில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 1500 அடி ஆழமுள்ள போர்வெல் கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்காத அவல நிலை கொங்கு மண்டலதம் முழுவதும் உள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாசன சங்கங்களை ஏற்படுத்தி சொந்த செலவிலேயே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது ஏற்கக் கூடியதல்ல. பல கிலோமீட்டர் தொலைவிற்கு காவிரி ஓரத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதன் மூலமாக குறிப்பிட்ட விவசாய நிலங்கள் மட்டும் பயன் அடைவதைத் தாண்டி அந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மேம்படுகிறது. அதன் மூலம் அங்கு வசிக்கின்ற மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கிறது.

இந்த உண்மைகளை அறியாமல் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை குற்றம் சாட்டி பேசியிருப்பது ஏற்புடையதல்ல. வருடத்தில் 8 மாதங்கள் தான் காவிரி ஓரத்தில் தண்ணீர் எடுப்பதற்கு அரசு விவசாயிகளை அனுமதிக்கிறது. காவிரியில் குறைந்த அளவு தண்ணீர் ஓடுகின்ற 4 மாதங்கள் அனுமதிப்பது இல்லை. உபரியாக கடலுக்கு செல்கின்ற நீரை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தங்கள் வறண்ட நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச குழாய் மூலம் எடுத்துச் செல்வதை குறை கூறக்கூடாது. இதில் பலன் அடைகின்ற விவசாயிகள் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட சிறு விவசாயிகள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கே தண்ணீர் கொடுக்க வேண்டிய கடமை இருந்தாலும், விவசாயிகள் தாங்களாகவே அரசாங்கத்தின் வேலையை செய்து கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.

எம்.பி அன்புமணி ராமதாஸ் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வறண்ட பகுதிகளை பார்வையிட நேரில் வர வேண்டும். அங்கு இருக்கின்ற ஏழை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாசன சங்கம் அமைத்து செயல்படுகின்ற செயல்பாடுகளை குறை கூறக்கூடாது. டெல்டா மாவட்ட விவசாயிகளை காட்டிலும் கொங்குமண்டல விவசாயிகள் எவ்வளவு சிரமப்பட்டு விவசாயத்தை செய்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கியும், சொந்த பணத்தை செலவு செய்தும் நீரேற்று பாசன திட்டத்தை நிறைவேற்றுகின்ற விவசாயிகளை அரசும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News