சேந்தமங்கலம் அருகே வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
சேந்தமங்கலம் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மகன் மணிவண்ணன் (27). இவரது தம்பி பிரதீப் (24). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு அவர்களது வீட்டின் முன்பு, மணிவண்ணன் உடலில் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார்.
இதைக்கண்ட, அவரது தம்பி பிரதீப், நண்பர் யுவராஜ், தாய் சிவகாமி ஆகியோர் அவரை மீட்டுச் சென்று புதன்சந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மணிவண்ணன் உடலை அவர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர்.
இத்தகவல் அறிந்து நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.