சேந்தமங்கலம் அரசு பள்ளி மைதானத்தில் கோர்ட்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோர்ட்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

Update: 2022-02-23 10:15 GMT

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோர்ட்டு அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் டாக்டர் பாலாஜி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கடந்த 28.10.1946 அடிக்கல் நாட்டப்பட்டு 5.10.1958ல், முன்னாள் முதல்வர் காமராஜரால், உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தபட்டு, தற்போது மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. பல நல்லோர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இந்த பள்ளிக்காக முழுமையாக இலவசமாக வழங்கியுள்ளனர். சேந்தமங்கலம் ஒன்றியத்தில் தடகளம் மற்றும் விளையாட்டு தொடர்பான அனைத்து நிகழ்வுகளும், இந்த அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் சிறப்புற அமையப்பெற்றுள்ளதால், மாவட்ட மற்றும் கோட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது இப்பள்ளி மைதானத்தில் தாலுக்கா அளவிலான கோர்ட்டுகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பொட்டணம், ராமநாதபுரம்புதூர், முத்துக்காப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி மற்றும் பேளுக்குறிச்சி ஆகிய அரசுபள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு சேந்தமங்கலம் பள்ளியில் உள்ள மைதான இடத்தினை கோர்ட்டு வளாகம் அமைக் க முடிவு செய்துள்ளது, பள்ளியின் வளர்ச்சிக்கும், விளையாட்டு தொடர்பாகன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பாதகமான செயலாகும்.

தற்போது தமிழக அரசு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இப்பள்ளியில் தற்போது 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் சூழலில், வருகிற ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்ககை மேலும் அதிகரிக்கும். எனவே தமிழக அரசு மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் கோர்ட்டு அமைக்கும் முடிவினை கைவிட்டு வேறு இடத்தில் கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News