எருமப்பட்டி: மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
எருமப்பட்டி அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பச்சமுத்து மகன் தினேஷ் (22) என்பவர் பொட்டிரெட்டிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்தபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையொட்டி, ஆத்தூர் சென்ற போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த தினேசை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.