கொல்லிமலை அடிவாரத்தில் பாதையை தடை செய்த வனத்துறையினர்: பாெதுமக்கள் போராட்டம்

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பாதையில் வனத்துறையினர் பள்ளம் தோண்டி தடுப்பு அமைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-22 03:15 GMT

கொல்லிமலை அடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள, பாதையை பள்ளம் தோண்டி வனத்துறையினர் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

கொல்லிமலை அருகே மலைவாழ்மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில், வனத்துறையின் பள்ளம் தோண்டி தடுப்பு அமைத்ததால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் குட்டுக்காடு கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மலைவாழ்மக்கள் வனப்பகுதி வழியக தங்கள் தோட்டங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதிக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் பாதையின் குறுக்கே பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி வழியை மறித்துவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட குட்டுக்காடு கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதிக்கு திரண்டு வந்து மீண்டும் வனப்பகுதி வழியாக செல்லும் பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாமக்கல் வனச்சரகர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலரை, நாமக்கல் மாவட்ட வன அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்திட நேரில் அழைத்து செல்வதாக வனச்சரகர் பெருமாள் உறுதி அளித்தார். மேலும் குட்டுக்காடு கிராமத்தினர் வனப்பகுதி வழியாக நடுக்கோம்பை வரை நடந்த செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அப்பகுதியில் ஆக்கிரமிப்பு எதையும் செய்யமாட்டோம் என்று பொதுமக்கள் தரப்பில் கடிதம் எழுதிக் கொடுத்தனர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News