கொல்லிமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் ? பொதுமக்கள் அச்சம்

எருமப்பட்டி அருகே, கெஜக்கோம்பை வனப்பகுதியில், ஆடுகள் மாயமானாதால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-10-22 02:15 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி அருகே, கொல்லிமலை அடிவாரப்பகுதியில், கெஜக்கோம்பை கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கொல்லிமலையை சேர்ந்த சேகர் என்பவர் இப்பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடுகள் கட்டியிருந்த பட்டியில் சிறுத்தை போன்ற மர்மவிலங்கு புகுந்து, ஆட்டை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அப்போது அந்த மர்ம விலங்கு அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆட்டுப்பட்டி அருகே நிலத்தில் பதிந்த கால்தடத்தை பார்த்தபோது, அது சிறுத்தையின் கால்தடம் போல் உள்ளதாக தெரிகிறது. மேலும் அருகில் உள்ள மணிகண்ட பிரபு என்பவரது விவசாய நிலத்திலும்,  சிறுத்தையின் கால்தடம் இருந்ததாக கூறப்படுகிறது. கெஜக்கோம்பை வனப்பகுதியில், ஆட்டைக் கொன்று அதன் கால் மற்றும் தோல் பகுதி சிதறி கிடந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன. ஆடுகளை சிறுத்தை போன்ற விலங்கு அடித்து கொன்றிருக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளும், தொழிலாளர்களுக்கும் தோட்டங்களுக்கு சென்று வர பயப்படுகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

ஜெகக்கோம்பை கிராமத்தில் சிறுத்தை உலாவது உறுதி செய்யப்பட்டால், அதனை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News