கணவர் உயிரிழப்பால் விரக்தியில் குழந்தையை வீசி, மனைவி தற்கொலை..!

கணவர் இறந்ததால் விரக்தியடைந்த மனைவி மகனைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-12 01:15 GMT

கீதா (பழைய படம்).

சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கொண்டப்ப நாயக்கனூரை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பேங்கில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கீதா (22). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு, ரித்வின் யாதவ் (3) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் கொரோனா நோய் பாதிப்பால் கடந்த ஆண்டு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கீதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கணவரின் வீட்டில் இருந்தால் மனவேதனை அதிகரிக்கும் என்பதால் கீதா வளையப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் தனியார் பி.எட் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, கொண்டப்பநாயக்கனூருக்கு மகனுடன் சென்ற கீதா அங்குள்ள விவசாய கிணற்றில் மகனை தூக்கி வீசிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தாய், மகன் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொண்டப்பநாயக்கனூரில் பட்டாளம்மன் கோவில் பண்டிகை நடைபெற்றுள்ளது, இதற்கு, கீதாவின் மாமனார் ரங்கசாமி வளையப்பட்டிக்கு சென்று மருமகள், பேரனை கொண்டப்ப நாயக்கனூருக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கீதா தான் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டை வேதனையுடன் பார்த்துள்ளார். அப்போது விரக்தியடைந்த கீதா மகன் ரித்விக் யாதவை தூக்கிக் கொண்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்று, மகன் ரித்விக் யாதவை முதலில் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News