நண்பரின் காதலியுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டவர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

சேந்தமங்கலம் அருகே நண்பரின் காதலியுடன் ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்ட தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-16 02:15 GMT

சேந்தமங்கலம் அருகே நண்பரின் காதலியுடன் ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்ட, தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் செல்போன் டவர் அமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (24) லேத் பட்டறை தொழிலாளி. இருவரும் நண்பர்கள். சுபாஷ் சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஃபேஸ் புக் மூலம் காதலித்து வந்ததாக தெரிகிறது.

மணிகண்டன் தனது நண்பர் சுபாஷ்க்கு தெரியாமல் அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். சில நாட்களாக சுபாஷிடம் அவரது காதலி ஃபேஸ் புக் மூலம் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார். தனது காதலியுடன் மணிகண்டன் பேசுவதால்தான், அவர் தன்னிடம் தொடர்புகொள்ளவில்லை என்பதை சுபாஷ் தெரிந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் மணிகண்டனிடம் கேட்டதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், அவரது நண்பர்களான வெங்கடேசன் (28), தினேஷ் (21) மற்றும் இன்னொரு 18 வயது வாலிபர் ஆகியோருடன் சென்று மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று சுபாஷ் மண்வெட்டியை எடுத்து மணிகண்டனை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, சுபாஷின் நண்பர்களான வெங்கடேசன், தினேஷ் மற்றும் 18 வயது வாலிபரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News