சேந்தமங்கலம்: புதன்சந்தை பகுதியில் கால்நடை சந்தை மீண்டும் இயங்க அனுமதி
சேந்தமங்கலம் அருகே, புகழ்பெற்ற புதன்சந்தை கால்நடை சந்தை மீண்டும் செயல்பட துவங்கியது.;
புதன் சந்தையில் நடைபெற்ற கால்நடைச் சந்தைக்கு அழைத்து வரப்பட்டிருந்த கால்நடைகள்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே புதன்சந்தையில், புதன்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லாரிகளில் பசு மாடுகள், காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வதும், வாங்கிச் செல்வதும் நடைபெறும்.
இங்கு மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயத்தால் பலமாதங்களுக்கு முன்பு இந்த சந்தையை மூட கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வேண்டுகோளை ஏற்று தற்போது, கால்நடைச் சந்தை மீண்டும் செயல்பட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.
புதன்சந்தையில் நேற்று, ஏற்கனவே ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த எருமை மாடு ரூ. 23 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ. 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசுமாடு ரூ. 20 ஆயிரத்துக்கு விற்பனையானது. கால்நடைகள் விலை சரிவடைந்துள்ளன. புரட்டாசி மாதம் என்பதாலும், கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகை குறைவாக உள்ளதாலும் விலை குறைந்து, விற்பனையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.