அரசின் உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் சஸ்பெண்ட்

நாமகிரிப்பேட்டை அருகே, உதவித்தொகை பெற்றுத்தர பெண்ணிடம் பணம் வாங்கிய, கிராம உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Update: 2022-04-30 01:15 GMT

நாமகிரிப்பேட்டை அருகே, உதவித்தொகை பெற்றுத்தர பெண்ணிடம் பணம் வாங்கிய, கிராம உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொ.ஜேடர்பாளயம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருடைய மனைவி தங்காயி. மோகன்தாஸ் இறந்து விட்டதால் மனைவி தங்காயி தமிழக அரசின் நலிவுற்றோர் உதவித்தொகை ரூ.20 ஆயிரம் பெற விண்ணப்பம் செய்தார். நீண்ட நாட்கள் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விஏஓ அலுவலக உதவியாளர் செந்தாமரை கண்ணனிடம், நலிவுற்றோர் உதவித்தொகை பெற்றுத்தர ரூ.2 ஆயிரம் கொடுத்தார். அவரும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இது குறித்து தங்காயி மகள் சங்கீதா செந்தாமரைக் கண்ணனிடம் கேட்டுள்ளார். அவர் உதவித்ததொகை பெற அதிகாரிகளுக்கும் பணம் தர வேண்டும் எனவே மேலும் பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இது சம்மந்தமான உரையாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, சோசியல் மீடியாக்களில் வெளியானது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் செந்தாமரை கண்ணனிடம் விசாரணை நடத்தினர். அதில் செந்தாமரை கண்ணன் தங்காயிடம் ரூ.2 ஆயிரம் வாங்கியது உண்மை என தெரியவந்தது. இதையொட்டி ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செந்தாமரை கண்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News