கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மருமகன் கொலை: மாமியார் உட்பட 3 பேர் கைது

Murder Case -வெண்ணந்தூரில் மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மருமகனை கொலை செய்த மாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-17 02:45 GMT

பைல் படம்.

Murder Case -ராசிபரம் தாலுக்கா, வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகன் அருள்மணி (30), ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவருக்கும் திருமணமாகி நித்ரன் (5), அகிலன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜோதிலட்சுமி அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு அவருடைய தாய் ஜானகி (49) வீட்டுக்கு சென்று விடுவார். இவ்வாறு ஜோதிலட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அருள்மணி, தனது மனைவியை கண்டித்தார்.

இதனால் கோபமடைந்த மாமியார் ஜானகி, மகளின் கள்ளக்காதலன் மணிகண்டனுடன் இணைந்து மருமகன் அருள்மணியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மணிகண்டன், அவருடைய நண்பர் லோகேஸ்வரன் (23) ஆகியோர் அருள்மணியை மது குடிக்க அங்குள்ள ஏரிக்கரையோர பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு 3 பேரும் அமர்ந்து மது குடித்தனர். அப்போது போதையில் இருந்த அருள்மணியை கற்கள் மற்றும் மதுபாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், மணிகண்டன், லோகேஸ்வரன் ஆகியோர் அருள்மணியை அடித்துக்கொலை செய்ததும், இதற்கு உடந்தையாக ஜானகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பதுங்கி இருந்த மணிகண்டன், லோகேஸ்வரன் மற்றும் ஜானகி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News