உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்க கோரி பெற்றோர்கள் முதல்வருக்கு கோரிக்கை

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் முதல்வருக்கு வேண்டுகோள்.

Update: 2022-02-27 01:30 GMT

நர்மதா.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ராசிபுரம் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் ராமன். அவர் மனைவி லீலாவதி. இவர்களுக்கு நர்மதா (23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நர்மதா உக்ரைன் நாட்டில் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவி நர்மதா இந்தியா திரும்ப முயற்சித்தார். விமான சேவை நிறுத்தப்பட்டதால் அவரால் தப்பி வர முடியவில்லை. மாணவி நர்மதா மற்றும் சில மாணவிகள், உக்ரைனில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அங்கு உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது:

உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் அங்குள்ள ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒரு வேளை கூட உணவு கிடைக்காமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள். தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது. தங்கியிருக்கும் பகுதிகளில் தொடர்ந்து ரஷ்யராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதனால், நில அதிர்வுகள் ஏற்படுகிறது. உயிர் பயம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மாணவிகள் கூறி வருகின்றனர். அதனைக் கேட்டு எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மிகவும் பயமாக உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவ மாணவிகளை மீட்டு தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News