அரசுப் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானதால் பரபரப்பு: போலீசார் விசாரணை

இராசிபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-05 02:45 GMT

இராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுக்கா, வடுகம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் பச்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த எடின்பரோ (54) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2ம் தேதி மாலை 3 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் இயற்பியல் பாடம் நடத்தினார். இதில் கணித அறிவியல், கணித உயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் 21 பேர் பங்கேற்றனர். அப்போது ஆன்லைன் மூலம், திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் வெளியானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பல பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும், கல்வித்துறைக்கும் மூலம் புகார் அனுப்பினார்கள். இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி, நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆபாச படம் வெளியானது குறித்து உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானது எப்படி என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். விசாரணை முடிந்து அந்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம் ராசிபுரம் பகுதி பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News