ராசிபுரம் பகுதி மரவள்ளிப்பயிரில் செம்பேன் தாக்குதல் : வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்குமா?

ராசிபுரம் பகுதியில், மரவள்ளிப்பயிரில் செம்பேன் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-05 03:29 GMT

ராசிபுரம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப்பகுதிகளான தொ.ஜேடர்பாளையம், தொப்பப்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பேளுக்குறிச்சி, புதுப்பட்டி போன்ற பகுதிகளில் அதிக அளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ரோஸ், குங்குமம், வெள்ளி தாய்லாந்து போன்ற கவகை கிழங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டுவருகிறது. பெரும்பாலும் மானாவாரி பயிராக பயிரிடப்படும் மரவள்ளிக் கிழங்கில்,  ஆண்டுதோறும் மாவுப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதலால் பயிர் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்து வருகிறது. பின்னர் தோட்டக்கலைத்துறையினர், அதற்கான வைரஸ் வகையை கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகளை பரிந்துரைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரவள்ளி பயிரில்,  செம்பேன் தாக்குதல் அதிகரித்துள்ளது. 10 மாத பயிரான மரவள்ளி இப்பகுதியில் தற்போது சுமார் 5 மாத பயிராக உள்ள நிலையில், பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால், பயிர்கள் வாடி, கிழங்கு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, மரவள்ளி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தெளித்தும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், வேதனையடைந்துள்ளனர். இந்த செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News