இராசிபுரத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் துவக்கி வைப்பு
இராசிபுரத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.;
இராசிபுரத்தில் மருத்துவ முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும், சுகாதாரத்துறையினர் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பல்வேறு துறை டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, எடை குறைவான குழந்தைகளுக்கு சத்து பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன வழங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, முன்னாள் எம்.பி. சுந்தரம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி தலைவர் கவிதா, நகர தி.மு.க. செயலாளர் சங்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், அருளரசன், இணை இயக்குனர் (மருத்துவம்) ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.