ராசிபுரம் பகுதிகளில் தொடர்மழை எதிரொலி : வேகமாக நிரம்பி வரும் ஏரி, குளங்கள்

ராசிபுரம் பகுதிகளில் பெய்த தொடர்மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் வேளாண் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-07-06 02:31 GMT

ராசிபுரம் பகுதியில் பெய்த தொடர்மழையால்,  மலையடிவாரத்தில் உள்ள கல்லங்குளம் ஏரி நிரம்பி வருகிறது.

ராசிபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளான ராசிபுரம், புதுப்பாளையம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. கனமழையால் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்த ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

இதேபோல, சேலம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்துள்ளதால் திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் மின்னக்கல், வாய்க்கால்பட்டரை, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, கொன்னையாறு வழியாகச் செல்வதால் அப்பகுதியில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையைப் பயன்படுத்தி ராசிபுரம் பகுதிய விவசாயிகள் நெல், வாழை, தென்னை, மஞ்சள், கிழங்கு, பருத்தி பயிர் சாகுபடியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News