ராசிபுரம் ஆத்மபூமி மின் மயான பணியாளர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா காலத்தில்சிறப்பாக பணியாற்றி வரும், ராசிபுரம் ஆத்மபூமி மின் மயானப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2021-07-15 04:00 GMT

ராசிபுரம் மின் மயானத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பாராட்டி போலீஸ் டிஎஸ்பி பாலமுருகன் பரிசு வழங்கினார்.

ராசிபுரம், முத்துக்காளிப்பட்டியில், ராசி ரோட்டரி பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில், ஆத்மபூமி மின் மயானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் மயானத்தில், 5 பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

அவர்கள், கொரோனா கால கட்டத்திலும் நோய் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் தன்னலம் பாராமல் ஆத்ம பூமியில், எரியூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா 2வது அலையின்போது இந்த மயானத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 சடலங்கள் வரை எரியூட்டப்பட்டன.

சிறப்பாக பணிபுரிந்து வரும், மின்மயான பணியாளர்களுக்கு பாராட்டு விழா,  ராசிபுரம் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. ஆத்ம பூமி பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம், அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் ஆத்ம பூமி மயானத்தை நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் தலைவர் சேதுராமன் உள்ளிட்ட அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐ மாணிக்கம் மற்றும் திரளான சேவை சங்கங்களின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News