கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Update: 2022-01-15 04:45 GMT

பைல் படம்.

பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலையில், மலை மீது பிரசித்திப்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி சாமிக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கோயில் நிர்வாக பணியாளர்கள், சிவாச்சாரியார்களைக் கொண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். திருக்கோயிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடவும் அனுமதி இல்லை.

வரும் 18-ஆம் தேதி தைப்பூச திருநாளன்றும் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கும் அனுமதி இல்லை, சாமி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு சிறிய மரத்தேரில் (சப்பரம்) சுவாமி அலங்கரித்து கோயில் நிர்வாக பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சாமி திருவீதி வலம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், முருக பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News