கழிவறைக்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு: பரமத்திவேலூர் அருகே பரபரப்பு

பரமத்திவேலூர் அருகே விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-04 10:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரின் 15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று பரமத்தி போலீசில் புகாரளித்தனர். புகாரின் பேரில் மணிகண்டன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து மணிகண்டன் தலைமறைவானார்.

இதனைத்தொடர்ந்து, பாண்டமங்கலத்திற்கு வந்த மணிகண்டனை சம்பவத்தன்றே போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணைக்காக பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது காவல் நிலையத்திற்குள் நுழையும் போதே தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

கழிவறைக்குள் சென்ற மணிகண்டன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் போலீசார் உள்ளே சென்று பார்த்த போது மயங்கி கீழே விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மணிகண்டனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர்.

அப்போது, தான் சாப்பிட்டு 3 நாட்கள் ஆனதாகவும், தனக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் மணிகண்டன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனின் உடல்நிலை மோசமானதை அடுத்து மேல் சிகிச்சைகாக  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்புக்கான காரணம் அறிவதற்காக நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடல், நாமக்கல் மகிளா கோர்ட் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் பிரேதப் பரிசோதணை நடைபெற்றது. பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News