பரமத்திவேலூரில் மழையால் திடீரென இடிந்த வீடு : 3 பேர் உயிர் தப்பினர்!
பரமத்திவேலூரில் நேற்று பெய்த மழையால் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.;
மழை கோப்பு படம்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், எஸ்.வாழவந்தி, பாலப்பட்டி, மோகனூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பகல் மற்றும் இரவு நேர வெப்பம் குறைந்து சில்லென்ற காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ப.வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (65). இவருடைய இரண்டு மகன்களும் வெளியூர்களில் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரஞ்சிதம் மட்டும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதனால், ரஞ்சிதம் வசித்த குடிசை வீட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி ரஞ்சிதம் உயிர் தப்பினார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி முத்தாயி (65), ஆகிய இருவரும் வீட்டில் இருந்த போது அவர்களது ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் கணவன் மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீண்ட நாட்களுக்கு பிறகு ப.வேலூர் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள் தோட்டங்களில் உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர்.