மோகனூர் அருகே பணம், நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை

மோகனூர் அருகே பணம், நகைக்காக 92வயது மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-07 02:00 GMT

கொலை செய்யப்பட்ட மாராயி.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா, ராசிபாளையம், நேரு நகரில் வசித்து வந்தவர் முத்துசாமி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மனைவி மாராயி (92) தனியாக வசித்து வந்தார். அவருக்கு, ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி, தனித் தனியாக  வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு மாராயி சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. அவரது வீட்டின் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மூதாட்டியின் மகள் வழி பேரன் கணேசன் (42) என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி மாராயி இறந்து கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த கணேசன், மோகனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு ஏடிஎஸ்பிக்கள் சேகர், செல்லபாண்டியன், டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மாராயி வீட்டின் ஒரு பகுதியில்,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் காளிதாஸ் (25) என்பவர், குடும்பதுடன் வசித்து வருகிறார். சந்தேகத்தின்பேரில் அவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம், நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததாகவும், ஆனால் பணம், நகை எதுவும் இல்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News