ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை
ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் முதியவர் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில், காவிரி ஆற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் ஈரோடு மாவட்டம் ஆனைக்கல்பாளையத்தை சேர்ந்த விவசாயி திருமலை ( 65) என்பது தெரியவந்தது. மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3-ம் தேதி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரியவந்தது. இதையொட்டி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜேடர்பாளையம் வந்த மொடக்குறிச்சி போலீசார் மற்றும் திருமலை குடும்பத்தினர் பிணமாக மீட்கப்பட்டவர், கடந்த 3-ம் தேதி காணாமல் போன திருமலை என்பதை உறுதிப்படுத்தினர்.
ஜேடர்பாளையம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதணைக்காக, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.