பரமத்திவேலூர் அருகே விவசாய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

பரமத்திவேலூர் அருகே விவசாய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-11 11:00 GMT

பரமத்திவேலூர் அருகே விவசாயதோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர். மேலும் சிலர் மறைவான பகுதியில் சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இந்த நிலையில் பரமத்திவேலூர் அடுத்து புதுவெங்கரை அம்மன் கோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் புது வெங்கரையம்மன் கோவில் அருகே உள்ள குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் குழந்தைவேல் தோட்டத்தின் மையப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கிருந்த 18 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கள்ளிப்பாளையத்தை சேர்ந்த சசிமணி (25) என்பவரை கைது செய்த போலீசார் தலைமறைவான குழந்தைவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

மோகனூர் 

மோகனூர் அருகே சங்கரம்பாளையம் பிரிவு ரோடு அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையில் போலீசார் லோகநாதன், சதீஸ்குமார் ஆகியோர் மதுவிலக்கு குறித்து வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார்சைக்கிள் டேங்க்கவரில் 5 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உன்னியூரை சேர்ந்த பழ வியாபாரி அண்ணாதுரை (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டர்சைக்கிள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News