பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் பகுதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2022-04-14 02:30 GMT

பைல் படம்

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இந்த மார்க்கெட்டிள் பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.240-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லை பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.340-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லை பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News