பரத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை

பரமத்திவேலூர் பூக்கள் ஏலச்சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-07-04 03:42 GMT

பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப்பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள்,  தங்கள் நிலத்தில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்களை, விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பூக்களை கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.150-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.140-க்கும், முல்லைப் பூ ரூ.160-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், அரளி கிலோ ரூ.60-க்கும், ரோஜா கிலோ ரூ.120-க்கும், முல்லைப்பூ ரூ.130-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும் ஏலம் போனது. திருமண முகூர்த்தங்கள் மற்றும் விசேஷ நிகழ்வுகள் எதுவும் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News