பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு: 108 சங்காபிசேகம்
பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு 108 சங்காபிசேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர், சக்தி நகரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று சமீபத்தில் கும்பாபிசேம் நடைபெற்றது. இதையொட்டி 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன.
மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ர்ச்சணை நடைபெற்றது. தொடர்ந்து 9 கலசங்கள் வைக்கப்பட்டு சக்தி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து சக்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.
மாலையில் சிவாச்சாரியார்கள் ஸ்ரீதர், செல்வபரணி மற்றும் குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்விகள் ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மூலிகை திரவியங்கள் மற்றும் பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அடுக்கு மற்றும் கும்ப தீபாராதணை நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மதிவானன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.