மோகனூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த பொக்லைனை மக்கள் சிறைப்பிடிப்பு

மோகனூர் அருகே ஆக்கிமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடபட்டனர்.

Update: 2021-09-23 02:30 GMT

மோகனூர் அருகே புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மாடகாசம்பட்டி பஞ்சாயத்து, எம்.ராசாம்பாளையம் கிராமத்தில் கல்லாங்குத்து என்ற பகுதி உள்ளது. இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மோகனூர் தாசில்தார் தங்காராஜ், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து 2 குடிசைகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். இந்த தகவல் பரவியதும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்து வீடுகளை அகற்றக்கூடாது என்று தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மாø 5 மணிவரை அதிகாரிகளும், பொதுமக்களும் எதிரும் புதிருமாக நின்றுகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து எதிர்ப்பு தெரிவித்ததால் மாலை 6 மணியளவில் அதிகாரிகள் அனைவரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனர்.

Tags:    

Similar News