கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது

பரமத்தி வேலூர் அருகே கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-11 00:30 GMT

கைது செய்யப்பட்ட ஆந்திர இளைஞர்கள்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அப்பகுதியில் உள்ள பேங்க் ஒன்றில், தன் கணக்கில் இருந்து ரூ. 8 லட்சம் பணம் எடுத்துள்ளார். தொடர்ந்து, தனியார் பைனான்ஸ் கம்பெனிக்கு சென்ற அவர் அங்கு சீட்டுப்பணம் ரூ. 12 லட்சம் எடுத்துள்ளார். மொத்தமாக ரூ. 20 லட்சத்தை தனது காரில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வந்ததும் உடன் வந்த தன் மகன் ஹரிஹரனிடம் பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியை லாக் செய்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். அவரது மகன் பணத்தை எடுக்க மறந்து காரை மட்டும் லாக் செய்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அவர்களை பின் தொடர்ந்து, இரண்டு மோட்டார் சைக்கிளில், ஹெல்மெட் அணிந்து வந்த, 3 மர்ம நபர்கள், வீட்டில் நிறுத்தியிருந்த காரின் கதவை உடைத்து, உள்ளே இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். புகாரின் பேரில், பரமத்திவேலூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சுனில்குமார் (28), ஆனந்த் (26), சர்க்கரையான் (28) ஆகிய மூவரும் நாமக்கல்லில் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்னையில் தங்கியிருந்த 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News