பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-07-27 02:49 GMT

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், மோகனூர், பாலப்பட்டி, வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

சிறு விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும், வாழைத்தார் விற்பனை சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் ரக வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3 வீதம் ஏலத்தில் விற்பனையானது.

ஏல மார்க்கெட்டில், நேற்று நடைபெற்ற ஏலத்தில்,  பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சம் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3 வீதம் விற்பனையானது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,000 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். திங்கட்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News