கபிலர்மலை ஒன்றியத்தில் கொரோனா பாதித்த 6 பேர் கவச உடையுடன் வாக்குப்பதிவு
பரமத்திவேலூர் அருகே, கொரோனா பாதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கவச உடையுடன் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்களித்தனர்.;
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கோப்பனம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கவச உடை அணிந்து வந்து வாக்களித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கோப்பணம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சேகர் என்பவர் செயல்பட்டு வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் சேகர் அதிமுக சார்பில் பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி கோப்பணம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக உரம்பூர் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக மாலை 5 மணி முதல் 6 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டு இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்யப்பட்டிருந்தன. கோப்பணம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த 6 பேர் வாக்களிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் முழு உடல் கவச உடை அணிந்து வந்து வாக்களித்தனர்.
அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களும் முழு உடல் கவச உடை அணிந்திருந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் ஜனநாயக கடமையாற்ற ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.