மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 295 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..!
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 295 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட முகாமில், 295 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல் தொகுதி - காரைக்குறிச்சிப்புதூர், ராசிபுரம் தொகுதி - கட்டணாச்சம்பட்டி, தொட்டிவலசு, முள்ளுக்குறிச்சி, சேந்தமங்கலம் தொகுதி - ரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியார் ச.உமா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பொன்னுசாமி, வனப் பாதுகாவலர் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், 295 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியில் ஒரு மனுதாரர் மின் இணைப்பில் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்த நிலையில், உடனடியாக அவருக்கு பெயர் மாற்றம் செய்து ஆணை வழங்கப்பட்டது.
மேலும், முள்ளுக்குறிச்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பெரப்பன் சோலையில் ரூ. 39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம செயலகம் என மொத்தம் ரூ. 56.5 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமி, அட்மா குழுத் தலைவர்கள் பெ.பாலசுப்பிரமணியன் (எருமப்பட்டி), எம்.பி.கௌதம் (புதுச்சத்திரம்), ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.