கிணற்றினுள் குதித்த போதை ஆசாமி: பல மணி நேரத்திற்குப்பின் உடல் மீட்பு
குமாரபாளையத்தில் கிணற்றில் குதித்த போதை ஆசாமியின் சடலத்தை நீண்ட நேரத்திற்குப்பின் தீயணைப்புப்படையினர் மீட்டனர்.;
குமாரபாளையத்தில் குடிபோதையில் கிணற்றில் விழுந்தவரின் சடலத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் விசைத்தறி கூலித் தொழிலாளி முத்துசாமி, 45. இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தினமும் குளிப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
நேற்று மாலை 04:00 மணியளவில் அதிக குடிபோதையில் இருந்த இவர், பலர் சொல்லியும் கேட்காமல் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் மேலே வரவே இல்லை. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில், நேரில் சென்ற மீட்பு குழுவினர் கிணற்றில் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப்பின் அவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.