குமாரபாளையத்தில் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-03-27 06:45 GMT

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் வண்ண, வண்ண விளக்குகள் அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். 

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தினமும் ஒவ்வொரு சமூகத்தினர், பல தரப்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதன்படி பூமிதி விழா, தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, அம்மன் திருகல்யாணம், வாண வேடிக்கை, சர்வ அலங்கார மற்றும் மஞ்சள் நீர் திருவீதி உலா, ஊஞ்சல் விழா போன்றவைகள் நடைபெற்றது.

இந்நிலையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி நகரில் பல இடங்களில் வண்ண வண்ண விளக்குகளால் சுவாமிகளின் உருவங்கள் அமைக்கப்பட்டன.

வெங்கடாசலபதி, கண்ணன் ராதை, முருகர், முனியப்பன் சுவாமி, மாரியம்மன், தில்லை நடராஜர், எழுமலையான் மகாலட்சுமி சுவாமிகள், உள்ளிட்ட சுவாமி அலங்காரங்களும், எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், ரஜினி, கமல், உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் வேடத்தில் இருந்த அரங்கமும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வண்ண மயமான இந்த திருவிழாவை காண பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்திருந்தனர். காலையில் தீர்த்தக்குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. . மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா மங்கள இசையுடன் நடைபெற்றது.

Tags:    

Similar News