குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி பூச்சாட்டு விழா
குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி இன்று பூச்சாட்டு விழா நடைபெற்றது.;
பூச்சாட்டு விழாவையொட்டி குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி இன்று பூச்சாட்டு விழா நடைபெறவுள்ளது.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ மிதித்தும், பல வகையான அலகுகள் குத்திக் கொண்டும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம்.
இந்த ஆண்டு காளியம்மன் திருவிழாவையொட்டி இன்று பூச்சாட்டு விழா நடைபெற்றது. பிப். 21 மறு பூச்சாட்டு, கிராம சாந்தி செய்தல், பிப். 22 கொடியேற்று விழா, பிப். 28 அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், தேர்க்கலசம் வைத்தல், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1 மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2 அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 3 தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை காட்சி விழா, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 4 அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 5 அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
கிராமத்து தெய்வ வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:
நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.
நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.இத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும்.
நாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன.பெரும்பாலும் அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.