கெடுபிடி இல்லை; செலவும் இல்லை -மீண்டும் சைக்கிளுக்கு மாறும் மக்கள்

போலீஸ் கெடுபிடி இல்லை; பெட்ரோல் செலவும் மிச்சம்; அத்துடன் உடலுக்கும் நல்லது என்பதால், பலரும் சைக்கிள் பயணத்திற்கு மீண்டும் மாறத் தொடங்கியுள்ளனர்.

Update: 2021-06-15 02:02 GMT

ரெக்க கட்டி பறக்குது சைக்கிள்...: வாகனத்தணிக்கை ஏதுமின்றி ஹாயாக  பள்ளிபாளையம் பாலத்தை கடக்கும் சைக்கிள் ஓட்டிகள்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இ-பாஸ் பெற்றுத்தான் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை. இதனால், காவல்துறையினரின் விசாரணைக்கு ஆளாக வேண்டியுள்ளது. தேவையற்ற அபராதம் உள்ளிட்டவற்றை சந்திக்க வேண்டியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம்,  ஈரோட்டை இணைக்கும் முக்கிய பகுதியாகும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பாலத்தின் இரு பகுதிகளிலும் ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் காவல்துறை சார்பில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 

இதனால், சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பல தரப்பினரும் மீண்டும் சைக்கிள் பயணத்திற்கு மாறி வருவதை பார்க்க முடிகிறது. பள்ளிபாளையம் சாலைகளில் பெரும்பாலான செக்போஸ்டில் சைக்கிள் ஓட்டிகளை காவல்துறையினர் கண்டுகொள்ளாதது, சைக்கிள் ஓட்டிகளுக்கு சாதகமாகிறது.

இதனால் சைக்கிள் ஓட்டிகள் ஊருக்குள் அனாயசமாக வலம் வருகின்றனர். உடலுக்கு நல்லது, பெட்ரோல் செலவும் இல்லை; போலீஸ் கெடுபிடியும் கிடையாது. இதுகுறித்து சைக்கிள் ஒட்டி முருகன் கூறுகையில், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வந்தாலும் சில நேரங்களில் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்வதை கண்கூடாக பார்க்கிறோம்.  பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் அதிகரித்ததால் பொருளாதார பாதிப்பும் உள்ளது. எனவே, சைக்கிள் மூலமாக வேலைக்கு சென்று வருவது அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டேன் என்றார்.

Tags:    

Similar News