பள்ளிபாளையம்: தேங்கிய மழைநீரில் பேப்பர் கப்பல் விட்டு நூதன போராட்டம்

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட,சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் பேப்பர் கப்பல் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-20 08:15 GMT

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரில் பேப்பர் கப்பல் விட்டு போராட்டம் நடத்தும் சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தினரை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புதிதாக ₹20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே நுழைவு பாலம் அமைக்கப்பட்டது.

திருச்செங்கோட்டை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளதால் இந்த பாதையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ரயில்வே சுரங்க பாலத்தின் கீழ் பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக,பள்ளமாக உள்ள சுரங்க பாதை சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மேடு பள்ளங்களில் வாகனம் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகின்றன.

எனவே சுரங்கப்பாதையில் சாக்கடை மற்றும் மழை நீர் தேங்குவதை அகற்றக் கோரியும், இந்த பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வு காண கோரி, "சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர்" இன்று குளம் போல் தேங்கியுள்ள மழைநீரில் பேப்பர் கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டதிற்கு P. வடிவேல் தலைவர், தலைமை தாங்கினார். பாலமுருகன் மாநில செயலாளர்,P.பன்னிர் மாவட்ட செயலாளர், K கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இது குறித்து இந்த அமைப்பினர் தெரிவித்த போது, தொடர்ச்சியாக பல முறை மனுக்கள் அளித்தும் மழைநீர் அகற்றப்படவில்லை. மேலும் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தொடர்ச்சியாக சுரங்கப் பாதையின் கீழ் தண்ணீர் தேங்கும் பட்சத்தில் சாலை மற்றும் பாலத்தின் உறுதித்தன்மையை கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் விபத்து அபாயம் தொடர்வதாலும் பேப்பர் கப்பல் விடும் போராட்டத்தை துவங்கி உள்ளதாகவும், அடுத்த கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால் கப்பல் விடும் போராட்டம் நடைபெற்றது, பள்ளிபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News