24 மனை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.;

Update: 2023-08-18 16:00 GMT

24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம், யாகசாலை பூஜைகள்

 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம், யாகசாலை பூஜைகள்

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.

குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் குதிரைகள், பசுமாடுகள் உள்பட பக்தர்கள் மஞ்சள் ஆடையுடன் பங்கேற்று தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நேற்று முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது. இன்று இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடக்கவுள்ளன. நாளை காலை 07:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்படவுள்ளது. விழாவையொட்டி பட்டத்தரசியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

கிராமத்து தெய்வ வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.

இத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும். பெருந்தெய்வங்களைப் போல தினசரி பூசைகளோ, படையல்களோ இத்தெய்வங்களுக்குச் செய்வதில்லை

நாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப் படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

Similar News