வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது;

Update: 2023-02-23 15:45 GMT

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா பிப். 21ல் கணபதி பூஜை, பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. பிப். 22ல் தொடங்கி தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுவருகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பிப். 28ல் காவேரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வருதல், மார்ச் 1ல் சக்தி கரகம், பூவோடு எடுத்து வருதல், வாண வேடிக்கை, மார்ச். 2ல் காவிரி ஆற்றில் கம்பம் விடுதல், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் மகா குண்டம், தேர்த்திருவிழா பிப்.14 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மறுபூச்சாட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. பிப். 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், தேர்க்கலசம் வைத்தல், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 3ல் தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை காட்சி விழா, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 4ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 5ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு மற்றும் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது.

இதே போல் குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி நேற்று மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்து வருகின்றனர். பிப். 28, மார்ச். 1, மார்ச். 2 ஆகிய 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.



Tags:    

Similar News