அப்பாடா தடுப்பூசி போட்டாச்சு... பள்ளிபாளையம் இளைஞர்கள் குஷி!

பள்ளிபாளையத்தில், 18 வயது முதல் 44 வயது உள்ளோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதை போட்டுக் கொண்ட இளைஞர்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Update: 2021-06-12 10:40 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருபுறம் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளும், மறுபுறம் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது கோவேக்ஸின்,கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள, மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாலும், தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டாலும், பல்வேறு மையங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படும் என்று, இன்று அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வரிசையில் நின்று தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட புவனேஸ்வரன் என்பவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போட முகாமுக்கு வந்தும்  தடுப்பூசி போட முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டதால் நிம்மதி அடைந்துள்ளேன். நூறு தடுப்பூசிகளுக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் திரள்வதால் தடுப்பூசி பற்றாக்குறையை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். 

இதேபோல், முகாமுக்கு வந்திருந்த இளைஞர்கள் பலரும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், சற்று நிம்மதி கொள்வதாக, உற்சாகத்துடன் தெரிவித்தனர். 

Tags:    

Similar News