குமாரபாளையம் ஜமாபந்தியில் 313 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 313 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

Update: 2024-06-14 00:59 GMT

பைல் படம்

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி ஜூன் 11ல் துவங்கியது. தாசில்தார் சண்முகவேல் தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி பங்கேற்று, ஜமாபந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆர்.டி.ஒ. வசம் வழங்கினார்கள். மனுக்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆர்.டி.ஒ. சுகந்தி அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் நில உரிமைகளில் உள்ள பெயர் திருத்தங்கள், முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச வீட்டு மனை, பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர்.

ஜூன் 11ல் ஆனங்கூர், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், காடச்சநல்லூர், புதுப்பாளையம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், பாப்பம்பாளையம் பகுதி பொதுமக்களும், நேற்றுமுன்தினம் கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கொக்கராயன்பேட்டை, படைவீடு ஆகிய பகுதி பொதுமக்களும் மனுக்கள் வழங்கினர். இறுதி நாளான நேற்று சவுதாபுரம், பல்லக்காபாளையம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம், சமயசங்கிலி அக்ரஹாரம், ஆகிய பகுதி பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.

மூன்று நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 313 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இறுதிநாளான நேற்று மட்டும் 197 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பரிசீலித்து, விரைவில் அதற்கான தீர்வினை வழங்க வேண்டி தாசில்தார் சண்முகவேல் உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கு ஆர்.டி.ஓ. சுகந்தி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News