மதுரை அருகே கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் கைது
தினகரனை கீழவளவு காவல்துறையினர் கைது செய்து, பட்டாக் கத்தி, இரு சக்கர வாகனம், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்;
கைது செய்யப்பட்ட தினகரன்
கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். பட்டாகத்தி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிலம்பரசன் ஜேசிபி ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில், சிங்கம்புணரியில் பணி முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில், மேலூர் அருகே கொன்னைபட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது, மேலூர் சாலக்கிபட்டியை சேர்ந்த மதிவாணன் என்பவருடைய மகன் தினகரன் (30), சிலம்பரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூபாய் 5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, சிலம்பரசன் கீழவளவு காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில், கீழவளவு காவல் ஆய்வாளர் கருப்புசாமி, சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர் தினகரனை தேடி வந்த நிலையில், கீழையூர் அருகே உள்ள அரசு மதுபானகடையில், மது வாங்குவதற்காக தினகரன் நின்று கொண்டிருப்பதாக கீழவளவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் தினகரனை சுற்றி வளைத்து கீழவளவு காவல்துறையினர் கைது செய்ததுடன். அவரிடமிருந்து, பட்டாக்கத்தி, இருசக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணை நடத்தியத்தில், அவர் பல்வேறு கொலை கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து, அவரிடம் மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய தினகரனை உடனடியாக கைது செய்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் ,கீழவளவு காவல் துறை ஆய்வாளர் கருப்புசாமி, சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டு தெரிவித்தார்.