பர்கூர்: அட்மா திட்ட ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி

பர்கூர் அருகே, முருக்கம்பள்ளம் கிராமத்தில் அட்மா திட்ட ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-07-29 13:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் எலத்தகிரி அடுத்த முருக்கம்பள்ளம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் வாயிலாக பயறு வகைள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியினை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சண்முகம் துவக்கி வைத்து, உழவர் பயிற்சி நிலைய செயல்பாடுகள் குறித்தும், கூட்டு பண்ணைய திட்டத்தின் அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார். பர்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, துவரை நாற்று நடவு தொழில்நுட்பங்களில் நாற்று நடவு செய்யும் முறை மற்றும் பூக்கும் பருவத்தில் டிஏபி தெளித்தல் குறித்த நுட்பங்களை விளக்கினார்.

மேலும், நிலக்கடலையில் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்தும, அதன் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் வேளாண்மை அறிவியல் மைய வல்லுநர் பூமதி விளக்கினார். இந்நிகழ்ச்சியில், இணையவழி வாயிலாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த சந்தேகங்களை விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மைய வல்லுநர் குணசேகர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பர்கூர் வேளாண்மை அலுவலர் சக்திவேல், எண்ணெய் வித்துப் பயிர்களில் விதை தேர்வு மற்றும் நேர்த்தி ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியின் முடிவில் மண் மாதிரிக்கான செயல்விளக்கம்,சூரிய மின் விளக்கு பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறி குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பாலேப்பள்ளி ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பர்கூர் வட்டார அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News