சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வீடியோ எடுத்து மிரட்டல்: டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது

பர்கூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த டிரைவர்கள் உள்பட 3 பேரை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.

Update: 2021-06-08 12:21 GMT

பர்கூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்து கைதானவர்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா நாகரசம்பட்டி அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. அவரது மகள் 17 வயது மகள், பிளஸ்2 படித்து வருகிறார். கணவன் -  மனைவி தினமும் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த, டிரைவர் சந்திரகணேஷ் (32), பெற்றோர் இல்லாததை பயன்படுத்தி, சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமிக்கு தெரியாமல் அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

கடந்த 26ம் தேதி சிறுமி தனது வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அந்நேரம் சந்திரகணேஷ், தனது நண்பர்களான டீக்கடை வைத்துள்ள ஜீவா (20), டிரைவர் ரமேஷ் (39) ஆகியோருடன் அங்கு வந்தார். அவர்கள், சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டதாக தெரிகிறது.

அதற்கு, சிறுமி மறுக்கவே, பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று சந்திர கணேஷ் மிரட்டி உள்ளார். அவர்கள் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு வந்தார்.

இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ்  நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் விசாரணை நடத்தி, சந்திர கணேஷ், ஜீவா, ரமேஷ் ஆகியோரை கைது செய்தார்.

அவர்கள் மூவர் மீதும்  போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரகணேசிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம்,  பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News